/indian-express-tamil/media/media_files/2024/11/20/PfwZBZ0niFU65x3Ufu9T.jpg)
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வி.திருவள்ளுவன் கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், இவர் வருகிற டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
இந்த நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் துணைவேந்தர் திருவள்ளுவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணைவேந்தர் திருவள்ளுவன், கற்பித்தல் சேவையில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் 5 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தேசிய கல்வி-ஆராய்ச்சி நிகழ்வுகளில் 4 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இயக்குனர், மொழியியல் துறை டீன் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராகவும், பதிவாளராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும், புதுச்சேரி மொழியியல் - கலாசார மையத்தின் வழிகாட்டு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.