தான் பேசிய உரையை முழுமையாகக் கேட்காமல், தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தொண்டர்கள் மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில்; ‘35 ஆண்டு காலம் திரையில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். பெற்றோர் தங்களின் குழந்தைகளை சினிமாக்காரர்களுடன் அதிக நெருக்கம் காட்ட அனுமதிக்கக் கூடாது என்று கூறினேன். சிலர் வாழும் காமராசர் என்றெல்லாம் பேசினார்கள். அதற்கு பதில் சொல்வதை போல், காமராசரை விஜய் உடன் ஒப்பிடுவதை விமர்சித்தேன். கலையை கலையாகவும், நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது உரையை முழுமையாகக் கேட்காமல், சில அரைகுறை வேட்காடுகள், என்னை மன்னிப்பு கேட்க அறிக்கை விடுவதெல்லாம் இங்கு வேண்டாம். வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது, யூடியூப் மூலம் பேச வைப்பதெல்லாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் விஜய்யை ஒரு வார்த்தைகூட விமர்சிக்கவில்லை. விஜய்-க்கு நீங்கள் இன்று ரசிகர்களாக இருக்கலாம்.
என் கள அனுபவம் 40 ஆண்டு காலம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள். தமிழக அரசியல் வரலாறு தெரியாதவர்களை விஜய் பேச அனுமதிக்கக் கூடாது. நான் தவறாக பேசியிருந்தால், பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய் கேட்க வேண்டும். அதைவிடுத்து அஞ்சான், குஞ்சான்களை வைத்து பேச வைப்பது சரியல்ல. இது தமிழர் நாகரிக அரசியலுக்கு அழகல்ல," என்று வேல்முருகன் கடுமையாக பேசினார்.