கொரோனா வைரஸ் தொற்று பரவாமால் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது. நாட்டு மக்களிடம் உரையாற்றிய நரேந்திர மோடி,"இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும், இன்று தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது. சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது.” என்றும் அறிவுறுத்தியுள்ளார்
சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க முதல்வர் வேண்டுகோள்: அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்," 22.3.2020 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் இயங்காது என்றும், மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் நிறுத்தப்படும் என்றும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் நாளை முதல் 31.3.2020 வரை மூடப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் பால், பால் பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெளிமாநில எல்லைகள் இணைக்கும் சாலைகள் மூடப்படும்: தமிழகத்தில் இதுவரை ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ், தமிழகத்திற்குள் பரவமால் இருக்க வெளிமாநில எல்லைகள் இணைக்கும் சாலைகளில் வாகனப் போக்குவரத்த்தை அரசு நிறுத்திவைத்துள்ளது. அதன்படி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரேதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைககள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள வாகனப்போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.
1. அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள்.
2. இதர சரக்கு வாகனங்கள்.
3. தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.
4. பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்.
எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ், தமிழகத்தில் நிலை என்ன?
- தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 4,253 மக்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
- கொரோனா வைரஸ் ஆறு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கும் 333 மக்களின் சாம்பிள்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.