அதன்படி, மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் என்பதால், தங்களை "சங்கிகள்" என்று அழைப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, அதற்காக தாங்கள் கவலைப்படவில்லை என்றார். மேலும், "சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது" என்று அவர் கூறினார். அமித்ஷாவின் மதுரை வருகை, புதிய நிர்வாகிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும், இந்த வருகை தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும், அதேவேளையில் தி.மு.க கூட்டணிக்கு பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையான தி.மு.க-வினருக்கு பக்தி உணர்வு இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, முதலமைச்சர் மற்றும் துரைமுருகன் உட்பட பலரும் சாமி கும்பிடுவதாக கூறினார். மேலும், மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டிற்கு தி.மு.க-வினரே ரகசியமாக வருவார்கள் என்றும், முருகன் மீது பக்தி கொண்டவர்கள் நிச்சயமாக வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு குடமுழுக்கு விழாவில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய தமிழிசை, ஆனால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றதாக தெரிவித்தார். கோயில்களில் உள்ள தீபங்களுக்கும் தி.மு.க-வினர் ஸ்டிக்கர் ஒட்டுவதை கண்டித்த தமிழிசை, "இதை கடவுள் மன்னிக்க மாட்டார்" என்று விமர்சித்தார்.