தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்மையில், தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அரசியலில் செயல்பட உள்ளதாக அறிவித்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன், தனது தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், புதன்கிழமை (20.03.2024) அவர் தன்னை பா.ஜ.க-வில் முறைப்படி மீண்டும் இணைத்துக்கொண்டார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பா.ஜ.க உறுப்பினர் அட்டை பெற்று முறைப்படி தன்னை பா.ஜ.க-வில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: “நான் எடுத்துள்ள முடிவு, கஷ்டமான முடிவு என்று அண்ணாமலை கூறினார். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்துள்ளேன். நானும் ஒரு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலாலயத்தில் தான் எனது மூச்சு உணர்வுபூர்வமாக இருந்துகொண்டு இருக்கிறது. இரண்டு ராஜ் பவன், அதன் வசதிகள், பணியாட்கள் என எவ்வளவு இருந்தாலும் ராஜ்பவனை விட்டுவிட்டு மக்கள் பவனமான கமலாலயத்தில் நுழைந்துள்ளேன். இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
அண்ணாமலையின் கரங்களை சாமானிய தொண்டனாக இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வலுப்படுத்துவேன். எனது கடுமையான உழைப்பு பா.ஜ.க.வோடு இருக்கும். மீண்டும் இந்த தமிழிசை உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக வந்துள்ளேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை கட்சியிடம் தெரிவித்தேன். எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அந்த தொகுதியில் களமிறங்குவேன். எனக்கு மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காக மீண்டும் அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
பா.ஜ.க அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சியை பார்க்க முடியாது. நிர்வாகங்களில் பெண்களுக்கு பா.ஜ.க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆளுநராக பணியாற்றிய காலங்களில் மிகப்பெரிய நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளேன்.
நான் சென்ற பிறகு தமிழகத்தில் பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்த தேர்தலில் மிக சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளார்கள். தாமரை தமிழகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது. மிக அபரிமிதமான வளர்ச்சியை தமிழக பா.ஜ.க பெற்றுள்ளது. அதற்கு பிரதமர் மோடியின் தமிழக கூட்டங்களே சாட்சி.
எனக்கு பதவிகள் கிடைத்தது மேஜிக் இல்லை. கடுமையான உழைப்பினால் கிடைத்தவை. இந்த கட்சியில் சாமானியர்கள் எல்லோருக்கும் இப்படி வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க மீது நிறைய விமர்சனங்கள் உள்ளன. ஆளுநராக இருந்ததால் அதை வெளியில் சொல்லவில்லை.
ஆளுநர் பதவி தேவையில்லை என்றால் மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் தி.மு.க இருந்தபோது ஆளுநரை எடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ராஜ்பவன் கதவை தட்டுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியானால் ஒரு நிலைப்பாடு என்று தி.மு.க உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தி.மு.க-வை விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“