பள்ளி மாணவர்களுக்காக பிரதமர் மோடி எழுதிய 'Exam warriors' என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கியுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பின் மாதந்தோறும், 'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றி வருகிறார். குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது உரையில் அவர்களுக்கு ஆலோசனை கூறினார். இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
கடந்தாண்டு பிப்ரவரியில், மாணவர்கள், பொதுத் தேர்வு சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், மன அழுத்தத்தை தவிர்ப்பது ஆகியவை பற்றியும் உரையாற்றினார்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதும், பிரதமரின் ஆலோசனையால் தாங்கள் பயனடைந்ததாக ஏராளமான மாணவர்கள், பிரதமருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் நலனை கருதி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரைகளுடன், தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் அதற்கான தீர்வுகள், முக்கிய தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை எளிய நடையில் புத்தகமாக எழுதத் துவங்கினார்.
இந்த முயற்சியின் பலனாக, 'எக்சாம் வாரியர்ஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதினார். இதனை டில்லியில் உள்ள, 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' பதிப்பகம் அச்சிட்டது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எழுதிய, 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையனிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்தார்.
இன்று, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் இந்த புத்தகத்தை வழங்கினார்.
இந்த புத்தகம், 208 பக்கங்கள் உடையது. இதன் விலை, 100 ரூபாயாகும். ஆன்லைனில், 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற இணையதளங்களில் இதனை வாங்கலாம்.