பிரதமர் கடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில், இந்த செப்டம்பர் மாதத்தை, ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க அழைப்பு விடுத்தார். போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான திட்டமாக, 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு மக்களிடையே கருத்தரங்குகள், ஆன்லைன் கலந்துரையாடல் என்னும் டிஜிடல் வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளிடையே, குறிப்பாக பெண் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடலைமிட்டாயில் உள்ள ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீடியோவில்," கடலையையும், வெல்லப்பாகையும் ஒன்றாக கலந்து ஒன்றாக இணைத்து செய்யக்கூடியதுதான் கடலை மிட்டாய். வெல்லப்பாகில் உள்ள நன்மைகளும், வேர்க் கடலையில் உள்ள நன்மைகளும் சேர்த்து அபரிமிதமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது எளிதாக கிடைப்பதினால், நாம் இதன் அருமையை உணராமல் உள்ளோமா என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "வெல்லப் பாகில் ஆன்டி- ஆக்சிடன்ட் உள்ளது. இது நமது உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள போலிக் ஆசிட் நமது இதயத்தை பாதுக்காக்கிறது. அதே போன்று இதில் உள்ள பைட்டோ பீனால்ஸ் நமது நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும், நிலக்கடலை நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மறதி நோயிடமிருந்து கடலை மிட்டாய் நம்மை கடலை மிட்டாய் பாதுக்கக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? விட்டமின் இ, துத்தநாகம், மெக்னிசியம் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்திருப்பதால் நமது தோல் பளபளப்பாக இருக்க உதவுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலம் இதில் இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் தரும் உணவுப் பொருளை நாம் உண்டு மகிழுவோம். சத்துணவைப் போல அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கடலை மிட்டாயைக் கொடுக்கலாம் என்பது என்னுடைய யோசனை" என்று தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாடு மட்டுமின்றி, குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தி, ஆண்-பெண் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளும் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil