புதிய அரசியல் பயணத்தை துவக்கியுள்ள நடிகர் கமலஹாசன் தலைப்பு செய்தியாகலாம், தலைவராக ஒருபோதும் ஆக முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார்.
இன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ள பொது கூட்டத்தில், நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். கடந்த சில மாதங்களாக அரசியலில் தொடர்பான அதிகம் விமர்சனங்களை முன்வைத்து வரும் கமலஹாசன் தனிக்கட்சி தொடங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.
கமலின் இந்த அறிவிப்பிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பல்வேறு விமர்சங்களை முன் வைத்தனர். இவை எல்லாவற்றையும் கடந்த இன்று(21.2.18) மதுரையில் நடிகர் கமல் தனது கட்சி குறித்த முழு விபரத்தையும் வெளியிடுகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “'தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவரால் ஒருபோதும் தலைவராக முடியாது. 50 வருடங்களாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர்கள் வந்துதான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் இருக்கிறார்கள். திரைப்படப் போட்டியைப் போல சகோதரர் கமல், அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்குகிறார்' என்று தெரிவித்துள்ளார்.