தஞ்சை அருகே வல்லத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளரால்தான் தன் மகன் உயிரிழந்தான் என்று பெற்றோர் போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மனைவி மேரி கிரேஸி. இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் திரண்பெணடிக்ட் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த திரண்பெணடிக்ட் வல்லம் அருகில் அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திரண்பெணடிக்ட் நெஞ்சில் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் திரண் பெணடிக்ட்டை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் திரண்பெணடிக்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் மாணவரின் பெற்றோர் வல்லம் போலீசில் அளித்துள்ள புகாரில், ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் மாட்டை அடக்கினால் ரூ.250 பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் என் மகன் மாட்டின் அருகே சென்றுள்ளார். இதில் மாடு முட்டியதில் என் மகன் இறந்து விட்டார். எனவே, மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு இறந்த மாணவரின் பெற்றோர் இன்று மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "அற்புதாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்றபோது மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார்.
என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மேலும் அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்