/tamil-ie/media/media_files/uploads/2023/07/Chennai-2.jpg)
மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுவை வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை சைபர் க்ரைம் போலிசார் கைது செய்தனர்
புதுச்சேரி வில்லியனூர் உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் நிறுவன ஊழியரான இவரது செல்போனுக்கு சமீபத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், குறிப்பிட்ட செயலியில் வரும் கட்டளைக்கு ஏற்ப பதிவிட்டால் நீங்கள் செலுத்தும் பணம் இரட்டிப்பாகும் எனக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை நம்பிய வீரபத்திரன் ,பல தவணைகளில் ரூ.7.08 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டிப்பான பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரபத்திரன், இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் செல்போன் மற்றும் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வங்கிக் கணக்கை பணப் பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் ரூ.1 லட்சம் தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி பலரும் வங்கிக் கணக்கை மர்ம நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. அவ்வாறு 30 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.
இந்த வழக்கில் மோசடிக்கு முகவர்களாக செயல்பட்டதாக சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது இலியாஸ், பாடி பகுதியைச் சேர்ந்த மோகன், தமிழ்வாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.