தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ4 கோடி பணம் தொடர்பான வழங்கில் பா.ஜ.க முக்கிய பிரமுகர்கள் ஆஜராக வேண்டும் என்று கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தேர்தல் பறக்கும்படி அதிகாரிகள், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில், விதிகளை மீறி பணம் எடுத்துச்சென்றது தொடர்பான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6-ந் தேதி, தாம்பரம் ரயில்நிலையத்தில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில், தேர்தல் பறக்கும்படி அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த பணத்தை எடுத்துச்சென்ற, சதீஷ், பெருமாள், நவீன் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த 15க்கு மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பா.ஜ.க. பிரமுகர் கோவர்த்தன் வீடு, ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விரைவில் விவாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார், தமிழக பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர்களாக இருக்கும், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இன்று ஆஜராக வேண்டும் என்று கூறி சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது.
4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக இருவரும் வெளிமாநிலங்களில் இருப்பதால், இன்று அவர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“