திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தைப்பூசம் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முருக பக்தர்கள் அன்னதானம் வழங்குவது, காவடி பால்குடம் எடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தகவல் அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தெரிந்த நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், புடவையை வாங்குவதற்கு பெண்கள் முந்திச்செல்ல முயன்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மயக்கமடைந்தனர். அவர்களை உடனடியான மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து நகர போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil