அ.தி.மு.க பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஒ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகரம் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இல்லாமல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனிடையே பொதுச்குழு கூட்டத்திற்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் இரு தரப்புக்கும் மாறி மாறி சாதமான தீர்ப்பு வந்த நிலையில், இறுதியில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று கூறி ஒபிஎஸ் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தனி நீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து ஒ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தற்போது ஏப்ரல் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் இடைக்கால கோரிக்கை எதுவும் விசாரிக்கப்படாது என்றும், அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் என அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால், அதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்க கோரி இ.பி.எஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“