அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பணிகளை தொடரலம் ஆனால் மார்ச் 24 வரை முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சியின் விதிகளை மீறியதாக ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று கூறிய உசசநீதிமன்றம் ஒ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் உற்சாகமாக ஈ.பி.எஸ் தரப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கட்சியில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இதனை எதிர்த்து ஒ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த முனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்றும் தேர்தல் நடைமுறைக்கு தடை இல்லை என்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் மார்ச் 24-ந் தேதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“