scorecardresearch

தொண்டர்களை நம்பி இந்த தர்ம யுத்தம்: திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ் பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற்றது.

OPS
ஒ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர்.  இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை கைப்பற்றினார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர். அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் கூட்டிய பிரம்மாண்ட மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நிலையில் முக்கியமாக, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை நிராகரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்று ஓபிஎஸ் தரப்பு திருச்சியில் முப்பெரும் விழா கூட்டம் கூடியது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, ஓபிஎஸ் நீக்கம், உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பேசிய ஒ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் ஆரவாரத்தில் திளைத்துப் போனார். பின்னர் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு குழுவின் ஒரு கம்பெனியின் நம் இயக்கம் இருக்கக் கூடாது. “போலி பொதுக்குழு கூட்டம் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை நிராகரிக்கிறோம். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்ற தீர்மானமும், புதிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

எம்ஜிஆர் உருவாக்கி அதிமுக ஜாதி, மதம் தாண்டி அனைத்து மக்களுக்குமான இயக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க., கட்சி நிதியை தவறாக பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீழ்வது நாமாக இருந்தாலும்; வாழ்வது அ.தி.மு.க., வாக இருக்க வேண்டும். வளம் பெறுவது தமிழகமாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.,வின் ஆணிவேராக இருப்பது, தொண்டர்கள் தான், அதனால் தான், கட்சியின் தலைமை பொறுப்புக்கு, யார் வரவேண்டும் என்பதை, தேர்ந்தெடுக்கும் உரிமையை எம்.ஜி.ஆர்., உருவாக்கினார்.

இதனாலேயே, கட்சியின் நிரந்தர பொதுச்செயலராக, ஜெ., மட்டுமே இருப்பார் என, உண்மையான பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அரசியல் வியாபாரிகள் சிலர், அதை மாற்றி உள்ளனர். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலர் அந்தஸ்தை, ரத்து செய்தவர்களை, ஓட ஓட விரட்டும் காலம், வெகு துாரத்தில் இல்லை.

என் வாழ்நாளில் ஜெயலலிதா, எனக்கு நிதியமைச்சர், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், 13 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் பொருளாளர் போன்ற, பதவிகளை கொடுத்துள்ளார். நான் பொருளாளராக, பதவியேற்றபோது கட்சி நிதியில், 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது ; அதை, 250 கோடி ரூபாயாக உயர்த்தி காட்டினேன். தற்போதுள்ளவர்களுக்கு, மனசாட்சி இருந்தால், கட்சி நிதியில், ஒரு நயாபைசாவை கூட, பயன்படுத்த கூடாது. அ.தி.மு.க., கட்சி நிதியை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை அழைக்கப்படும் என பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் எனக்கு தந்த பதவியை, நான் திருப்பி கொடுத்துவிட்டேன், பழனிச்சாமிக்கு யார் பதவி கொடுத்தா.சசிகலா தான், பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியை கொடுத்தார் ; அதை, ஒத்துக்கொள்ள வேண்டும்.அதை, மறந்துவிட்டு தனக்கு தானே, பொதுச்செயலர் பதவியை சூட்டிக் கொண்டுள்ளார், அது, ஒரு கேலிகூத்தானது. எம்.ஜி.ஆரும், பழனிச்சாமியும் ஒன்றா? அவரின், கால் துாசிக்கு கூட, பழனிச்சாமி வரமாட்டார். எம்ஜிஆர் உருவாக்கிய தொண்டர்களுக்கான இயக்கத்தை, மீண்டும் தொண்டர்களிடமே கொடுப்பதற்காக, இந்த மாநாடு நடைபெறுகிறது.

பழனிச்சாமியின் துரோகத்துக்கு சாவுமணி அடித்தேயாக வேண்டும் என்ற, நிலை உருவாகி இருக்கிறது.அதை, செய்து முடிக்கும் பணி உங்களிடம் தான் உள்ளது. எங்களுக்கு அனைத்து பதவிகளையும், ஜெயலலிதா கொடுத்து சென்றுள்ளார்.சாதாரண தொண்டன் தான், இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் ; தொண்டன் தான், முதல்வராகவும் வர வேண்டும். அதை தவிர்த்து, குடும்பத்தின் கைகளுக்குள்ளாகவோ அல்லது பழனிச்சாமி நடத்தும் குழுவின் கைகளுக்குள்ளாகவோ போய் விடக்கூடாது. இதற்காக, எந்தவொரு தியாகத்தையும் செய்ய, நான் தயாராக உள்ளேன்.

நம்மை பார்த்து ஏளனம் செய்தவர்கள். போலிபோலி பொதுக்கூட்டத்தில் தண்ணீர் பாட்டில் வீசியவர்கள், காரில் காற்றை பிடுங்கி விட்டவர்களுக்கு, பாடம் புகட்ட வேண்டும்.தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வைப்பதே, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்.,க்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். அ.தி.மு.க., சார்பாக, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சார்பில், அறக்கட்டளை துவங்கி, நலத்திட்டங்கள் வழங்கப்படும்.தற்போது, நடக்கும் தர்மயுத்தத்தில், ஜாதி, மதத்துக்கு அப்பாற்ப்பட்டு செயல்பட வேண்டும். தொண்டர்களான உங்களை நம்பித்தான் இந்த தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளேன் எனப் பேசினார்.

திருச்சி மாநாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். தொண்டர்கள் மாநாட்டு நிகழ்வுகளை எளிதில் பார்வையிடுவதற்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிமுக கூட்டம் போல் ஒரு பிரம்மாண்டத்தை ஓபிஎஸ் கூட்டியது குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu aiadmk ops speech at trichy conference update in tamil