அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம், சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட, ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க –வில் வழக்கம்போல், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலையில், மக்கள் நீதி மய்யம் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டி இல்லாமல், தி.மு.கவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே தமிழகத்தின் எதிர்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது கட்சியை பா.ஜ.கவுடன் இணைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த இரு முக்கிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அ.தி.மு.க தவிர்த்து மற்றொரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். யாருடன் கூட்டணி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“