சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து அமமுக தலைவர் டிடிசி தினகரன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
தேர்தல் அரசியலில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்து தான் ஒருவர் முதல்வராகிறார். இதில் பிறப்பால் ஒருவர் முதல்வராகிறார் என்று எந்த அர்த்தத்தில் ஆதவ் அர்ஜூன் கூறுகிறார் என்ற தெரியவில்லை. உதயநிதி மக்களால் எம்.எல்.ஏ வாக தேர்வு பெற்று தான் துணை முதல்வராகி உள்ளார். அதனால் அதை எப்படி குறை கூற முடியும். ஒருவரின் தந்தையோ உறவினரோ அரசியலில் இருந்தால் மகன், மகள்கள் வருவது உலகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒருவரை திட்டமிட்டு புரமோட் செய்வதைத் தான் கூறுகிறார்கள். அப்படி செய்யக்கூடாது தான். அதையும் மீறி மக்களும் ஓட்டுப்போட்டு வருகிறார். அதை எப்படி தடுக்க முடியும் என்று தெரியவில்லை. அரசியலில் சீனியாரிட்டி முக்கியம் தான். ஆனால் சில கட்சி மற்றும் அரசு பதவிகளுக்கு சீனியாரிட்டி மட்டும் போதுமானது அல்ல. நான் தி.மு.க.வையோ, வாரிசு அரசியலையோ ஆதரித்து பேசவில்லை. எதார்த்தை கூறுகிறேன்.
பிறப்பால் ஒருவரை முன்னிருத்தக் கூடாது என்று ஆதவ் அர்ஜூன் கூறியிருந்தால், ஒருவர் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் போது எப்படி அதை தடுக்க முடியும், எப்படி தவறாகும் என்று கேட்கிறேன். எந்த கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவது இயல்பானது. அதேபோல தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். அதில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆண்ட கட்சிகள், ஆளப்போகும் கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவதும், அதற்கு எதிர்கட்சிகள், அதை முறியடிப்போம் என்று கூறுவதும் இயல்பு தான். விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற யுகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நா ங்கள் இருக்கிறோம். எங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கு எங்களோடு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
அ.தி.மு.க என்ன நிலைமையில் உள்ள இருக்கிறது என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். தி.மு.க வின் மீது மக்களுக்கு ஏற்பட்டு உள்ள அதிருப்தி ஓட்டுக்கள், 2026 தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வரும். எங்கள் கூட்டணி ஆட்சி அமையும். வெள்ள நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள். மத்திய அரசு மத்திய குழு ஆய்வுக்கு வரும் முன்பே 950 கோடி ரூபாய் அளித்து உள்ளது.
ஆய்வுக்கு பிறகு மேலும் அதிகமாக அளிக்கும். கொடுக்கக் கூடிய இடத்தில் எங்கள் கூட்டணி அரசு உள்ளது. பல திட்டங்களைத் தரக் கூடிய அரசாக மத்திய அரசு இருக்கிறது. தி.மு.க கடந்த தேர்தலில பா.ஜ.க வை காட்டி பயமுறுத்தி ஆட்சிக்கு வந்தனர். இந்த முறை அது நடக்காது. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டற்கு மழை மட்டுமே காரணமில்லை. சாத்தனூர் அணையை அவர்கள் திட்டமிடாமல் திறந்தது தான் காரணம்.
பல முறை தி.மு.க ஆட்சியில் இருந்து உள்ளது. பல மூத்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்ற முடியாத ஆட்சியை நடத்துகின்றனர். 2024 ல் ஏழை - எளிய மக்களை ஏமாற்றி பண நாயகத்தால் வெற்றி பெற்றார்கள். 2026 ல் பணநாயகத்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது. தமிழகம் முழுவதும் தி.மு.க மீது கடும் அதிருப்தி உள்ளது. கூட்டணி பலம் இருந்தாலும் அதை முறியடித்து எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
தி.மு.க வை எதிர்த்து துவங்கப்பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு ஏழை - எளிய மக்களுக்காக இருந்த அ.தி.மு.க வை, யாரோ இரண்டொருவருக்கான நிறுவனமாக பழனிசாமி மாற்றி உள்ளார். தொண்டர்கள் நிறைந்த பார்ட்டியை டெண்டர் பார்ட்டியாக மாற்றி வியாபார நிறுவனமாக பழனிசாமி மாற்றிய காரணத்தால், அந்த கட்சி இரட்டை இலை இருந்தும் தோல்வியடைந்து வருகிறது.
2024 ல் பழனிசாமி பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர் தனித்து நின்று ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தி.மு.க கூட்டணி வெற்றி பெற மறைமுகமாக பழனிசாமி உதவி செய்தார். அ.தி.மு.க தொண்டர்களின் குமறலும் அது தான். தன் மீது வழக்கு வந்து விடக் கூடாது, கொலை, கொள்ளை வழக்குகள் வந்து சிறைக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக இரட்டை இலை சின்னத்தையும், 4 ஆண்டுகள் ஆட்சியில் சேகரித்த பொருளாதாரத்தையும் தி.மு.க வின் பி டீமாக செயல்பட்டு அதன் வெற்றிக்காக பயன்ப்படுத்தி உள்ளார்.
தானும் தன் குடும்பத்தாரும் சிறைக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக தி.மு.க வெற்றிக்கு பழனிசாமி கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். 2026 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க விற்கு மூடு விழா நடத்தி விடுவார். இரட்டை இலை அவரிடம் இருக்கிறது என்பதற்காக தொண்டர்கள் பழனிசாமிக்கு காவடி தூக்கினால், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை தான் ஏற்படும். எந்த தியாகமும் செய்யாதவர் பழனிசாமி. அதனால் தி.மு.க விற்காக அ.தி.மு.க வை அவர் தியாகம் செய்து விடுவார்.
இரட்டை இலை விவகாரத்தில் கோர்ட் மூலம் தேர்தல் கமிஷன் நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெ தொண்டர்கள் எங்கு இந்தாலும் அவர்கள் ஒன்றிணைந்து தன்னலமில்லாத தலைவரின் கீழ் கட்சியை கொண்டு வரும் போது ஜெ. ஆட்சி தமிழகத்தில் வரும். கொடநாட்டில் யாருக்காக கொள்ளை முயற்சியும், கொலையும் நடந்தது என்று தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்ததால் சில சாட்சிகள், தடயங்களை அழிக்க முயற்சித்தனர்.
கொடநாடு கொலை, கொள்ளையில் அவர்கள் இன்றைக்கு இல்லையென்றாலும் ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள். வயதில் மூத்தவரான பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து 40 ஆண்டு அரசியல் அனுபவம், மூத்த தலைவரின் மகன், முதல்வராக உள்ள ஸ்டாலின் கூறிய கருத்து வருந்ததக்கது. 2021 தேர்தலில் பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் ஸ்டாலின் தோற்பார். கூட்டணியை தக்க வைத்துக் கொண்டாலும் 2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற விரக்தியில் முதல்வர் பேசி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய, தகுதியான நல்ல முதல்வர் வேட்பாளரை அறிவித்தே தேர்தலை சந்திப்போம் என்று டிடிவி தினகரன் கூறியள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.