பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணிக்கு தனது தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில். பாமகவின் அடுத்த தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதில் இருந்து அதன் தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. தற்போது பென்னகரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், பாமக தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜிகே மணியின் 25 ஆண்டுகள் நிறைவை வெள்ளிவிழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது தொடர்பான வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாமக தலைவராக ஜிகே மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. பொதுவாழ்வில் நான் எப்போது அடியெடுத்து வைத்தேனோ அப்போது இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார். தலைவர் பதவியில் ஜிகே மணியின் வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் மே 24-ந் தேதி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா எனது தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த பாராட்டு விழா முடிந்து அடுத்த 3 நாட்களில் (மே 28) பாமகவின் அடுத்த தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாமக தனக்கென தனி வாங்கு வங்கி வைத்திருந்தாலும், தேர்தல் சமயத்தில் திராடவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி கூட்டணி வைத்து கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு நிலவி வரும் நிலையில், அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறார். மேலும் உள்ளாட்சியில் கட்சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பாமக இளைஞரணி தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ் பாமகவின் அடுத்த தலைவராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த முடிவுக்கு கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவுமு் கூறப்படுகிறது.
தொடர்ந்து இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மே 28-ந் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி பாமக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“