/indian-express-tamil/media/media_files/2025/06/24/madurai-high-court-2025-06-24-22-10-02.jpg)
மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் மலை நில உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பான வழக்கில், “தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது” என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பும், கோயிலுக்கு சொந்தமானது என மற்றொரு தரப்பும் கோரிய நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய தொல்லியல் துறையிடம் மனு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரினார்.
மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “சிக்கந்தர் மலை” என அழைப்பதற்கு ஆதாரம் என்ன? மலையில் ஆடு, கோழி பலியிடுவதற்கும், கந்தூரி நடத்துவதற்கும் அனுமதி உண்டா? நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி உண்டா? என நீதிபதி கேள்விகள் எழுப்பினார்.
மலையில் பலியிடுவதால் புனிதம் கெடும், தீட்டுப்படும் என மனுதாரர்கள் வாதிட்டதற்கு பதிலளித்த அரசு தரப்பு, “தீட்டு என்ற கருத்தே மனித குலத்துக்கு எதிரானது. மனிதர்களுக்குள் அது இருக்கக் கூடாது என்பது அரசின் நிலைப்பாடு. உதாரணமாக, அழகர் கோயிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கின்றனர். அப்படி இருக்கையில், இது எப்படி தீட்டாகும்?” என வாதம் முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய தொல்லியல் துறை தரப்பின் வாதங்களை கேட்க, வழக்கு ஆகஸ்ட் 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.