மறைந்த ராணுவ ஜெனரல் பிபின் ராவத்தின், பஞ்சலோக சிலை தயாரிக்கும் பணியில் கும்பகோணம் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நீலகிரி அருகே, காட்டேரி-நஞ்சப்பன்சத்திரம் பகுதியில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 12 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ ஜெனரல் ராவத், நாட்டிற்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில், பஞ்சலோகத்தைப் பயன்படுத்தி 120 கிலோ மார்பளவு சிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் மதிப்பீட்டில் இந்த சிலை உருவாக்கப்படுகிறது” என ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்ஃபேர் பவுண்டேஷனுடன் இணைந்து பணியை மேற்கொண்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ் பாபு தெரிவித்தார்.
கும்பகோணம் நாகேஸ்வரன்கோவில் தெருவில் உள்ள ஸ்டூடியோவில் வைத்து சிலை தயாரிக்கப்படுகிறது. களிமண்ணால் சிலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முடிந்துவிட்டது. பஞ்சலோக உலோகத்தால் சிலையை மூடும் பணி விரைவில் தொடங்கும். இப்பகுதியைச் சேர்ந்த மூத்த கலைஞர்களால் இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என மற்றொரு முன்னாள் ராணுவ வீரரும், சிலை கமிட்டி உறுப்பினருமான பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சிலை பணிகள் முடிவடையும் என்று குழு தெரிவித்துள்ளது. “முடிந்ததும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கி, எட்டு மாநிலங்களைச் சுற்றிவந்து, புது தில்லியை அடைவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த யாத்திரை இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கும்,” என்றார் பாபு.
புதுடெல்லியை அடைந்ததும், இந்தியா கேட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிலை ஒப்படைக்கப்பட்டு, பிறகு, தேசிய போர் நினைவிடத்தில் வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “