திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட விபரங்கள்
ரூ.600 கோடியில் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ரூ.70 கோடியில் காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
சிப்காட் பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் பயன்பாட்டிற்கு 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் ரூ.30 கோடியில் அமைக்கப்படும்.
இருங்காட்டுக்கோட்டை மற்றும் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.20 கோடியில் 2 தங்குமிடம் அமைக்கப்படும்.
நீர் பயன்பாட்டை கண்காணிக்கவும், நீர் விரயத்தை கட்டுப்படுத்தவும் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் சிப்காட்டில் உருவாக்கப்படும்.
மணப்பாறை, தேனி, திண்டிவனம், சூளகிரி ஆகிய சிப்காட்டுகளில் ரூ.20 கோடியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
விருதுநகர், தேனி,சூளகிரி சிப்காட்டுகளில் நிர்வாக அலுவலகம் கட்டப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.100 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
இதனிடையே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்: கிண்டியில் ரூ.175 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம்,
கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுத்தொழில் முனைவோரின் தேவையை பூர்த்தி செய்து வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடிய வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்.
புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 6200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்ட உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மாநில அரசு பங்களிப்புடன் ரூ.3 கோடியில் விசைத்தறி குழுமம் அமைக்கப்படும். கோவையில் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டை குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் ரூ.1 கோடியில் தேன் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.
மகளிர் தொழில் முனைவோர்கள் பயன் பெறும் வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ரூ.1.15 கோடியில் மகளிர் எம்ராய்டரிங் குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், கரசமங்கலத்தில் ரூ.3.39 கோடியில் மண்பாண்ட குழுமம் அமைக்கப்படும்.
கோவையில் ரூ.4 கோடியில் தென் நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் மையம் அமைக்கப்படும்.
ரூ.16 லட்சத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 1 லட்சம் தென்னை நார் வளர்ப்பு பைகள் பயன்படுத்தப்படும் என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil