கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த அறிவு சார் நூலகத்தில் புத்தகங்கள் வைக்கும் அலமாரியில் கோவையின் பாரம்பரிய சின்னங்கள், அடையாள சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவு சார் மையத்திற்கும் ஆதியோகிக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே திட்டமிட்டு கோவையின் அடையாளம் என்பது போல் ஈசாவை உருவகப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது அறிவு சார் நிறுவனத்திலும் ஆதியோகி படத்தை வைத்து நுழைந்திருக்கின்றார்கள். அரசு உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்படுத்த வேண்டும். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“