/indian-express-tamil/media/media_files/2025/10/06/nainar-nadda-2-2025-10-06-07-54-15.jpg)
நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்தை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்கிறார்.
மதுரையில் இருந்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரப் பயணம் தொடங்க உள்ள நிலையில், பா.ஜக. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இந்த பயணத்தை தொடங்கி வைக்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம், பிரசாரப் பயணங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து தனது பிரசாரப் பயணத்தை தொடங்க உள்ளார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் நடைபெறும் இப்பயணம், முதல் கட்டமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. பயணம் நெல்லையில் வரும் 17-ந்தேதி நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மதுரையில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்காக பழங்காநத்தம் ரவுண்டானா, முனிச்சாலை சந்திப்பு, புதூர் பஸ் நிலையம், அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் உள்ளிட்ட இடங்களை பா.ஜ.க.வினர் முன்மொழிந்துள்ளனர்.இது தொடர்பாக மதுரை போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதூர் பஸ் நிலையம் அல்லது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
வருகிற 12-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த தொடக்க விழாவில், பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். மதுரை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்கவுள்ளனர். தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும், நயினார் நாகேந்திரன் தனது பிரசாரப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு புறப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.