/indian-express-tamil/media/media_files/2025/04/20/Hdsjkuuj048ons5jJvtN.jpg)
அ.தி.மு.க.,வினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும், நமது கூட்டணி ஆளும் கட்சியாக வர வேண்டும், இனியொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நகேந்திரனுக்கு கோவை கோட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை,திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் வரவேற்பு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் முருகானந்தம் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பொறுப்பு கிடைத்தால் கையில் சால்வையுடன், பிற தலைவர்களை பார்க்க போவார்கள். நம் தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களை பார்க்க வந்து இருக்கின்றார். பா.ஜ.கவை பொறுத்தவரை யார் கட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப போகும் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வேகத்துடன் பணியை துவங்கி இருக்கின்றார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 2026 தேர்தலில் பல மடங்கு உயரும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி. தி.மு.க இதுவரை சந்திக்காத தோல்வியை அடையும் எனத் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் நான் அமைதியாக பேசுவேன், ஆனால் வானதியின் பேச்சு தி.மு.க.,வினர் அலறும் வகையில் இருக்கும், அவர் பேசினால் அமைச்சர்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு, ஆனா ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அண்ணாமலைக்கு இருக்கின்றது.
கோவை இனிப்பான மண், நெல்லை மண் வேறு விதமாக இருக்கும். இங்கு எல்லா சமூகத்தினரும் மரியாதையாக பேசக்கூடிய பகுதி. என்னுடைய பையன்களில் ஒருவனை கோவையிலேயே இருக்க வைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.
கூட்டணியை பற்றி யாரும் கவலை பட வேண்டாம், சீட்டை பற்றியும் கவலை பட வேண்டாம். கூட்டணிகளை பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்யும். மாநில தலைவராக என்னுடைய பொறுப்பு தொண்டர்களை பாதுகாப்பதுதான். சீட் பற்றி முடிவு செய்வது அமித்ஷாவின் வேலை.
என்னுடைய போன் உள்பட பா.ஜ.க.வினருடைய போன் எல்லாத்தையும் ஆளும்கட்சியினர் டேப் செய்கின்றனர், எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
அமித்ஷா ஒரே நாளில் எல்லா வேலையினையும் முடித்து விட்டார். அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருகின்றேன், நீ பேசாமல் இருந்தால் போதும் என சொல்லி இருக்கின்றார். நாம் நம்முடைய பூத்தில் வேலைகளை பர்த்தால் போதும், இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம்.
2026ல் தி.மு.க out of control ஆகப்போகின்றது. அமித்ஷா போன மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று இருக்கின்றது. இப்போது தமிழகத்திற்கு வந்து சென்று இருக்கின்றார். நாம் அ.தி.மு.க.,வினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். நமது கூட்டணி ஆளும் கட்சியாக வர வேண்டும். இனியொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்தார்.
கோவை சூலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சோமனூருக்கு வருகை தந்து, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறியாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அமைதியான முறையில் தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார். விசைத்தறியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.