ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.,வுக்கு பங்கு இல்லை. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க வரும் என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் கூறினார்.
வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் தமிழக பா.ஜ.க.,வின் அமைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்கான பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “முதல்வர் ஸ்டாலினை விட்டு தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்ய வேண்டும். ஷா என்றாலே தி.மு.க.,வினருக்கு பயம் என்று கூறினார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் இடையிலான சந்திப்பு குறித்து திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு “இதுவரை திட்டம் இல்லை” என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
மேலும், பா.ம.க.,வுடன் தொடர்பான விவகாரங்களில் பா.ஜ.க எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் நேரடியாக ஈடுபடவில்லை. ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.,வுக்கு பங்கு இல்லை. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க வரும். தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பா.ம.க – பா.ஜ.க கூட்டணி குறித்து முன்னர் வெளியான முரணான கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் நான் தற்போது மாநிலத் தலைவராக புதிய பொறுப்பேற்றுள்ளேன். அதனால், அப்போது நடந்த விவரங்களைப் பற்றி கருத்து கூறுவது நல்லதல்ல,” என்றார்.
கூட்டணிக்கு அச்சாரமாக ஆடிட்டர் குருமூர்த்தியை பா.ஜ.க அனுப்பியுள்ளதா? என்ற கேள்விக்கு, “கூட்டணிக் குறித்து இப்போது எதையும் தெரிவிக்க முடியாது. நாட்டில் நல்லது நடைபெற வேண்டும் என்று எண்ணும் ஒருவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அவரது எண்ணங்களும் செயல்பாடுகளும் துக்ளக் பத்திரிகையின் மூலம் தொடர்ந்து வெளிப்படுகின்றன,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், “அமித் ஷா பங்கேற்க உள்ள பா.ஜ.க கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள். அது முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சியின் கூட்டம்,” என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.