எம்.எல்.ஏ, தேசிய பொதுச்செயலாளர், சட்டமன்ற கொறடா போன்ற முக்கிய பொறுப்புகளை விட்டுவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தேன் என முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி கட்சியில் தனக்கு முக்கிய பதவிகள் தரவில்லை என்ற அதிருப்தி காரணமாக, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.,வில் இணைந்தார். அவருக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்லது அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயதாரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேலும், கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பொறுப்பு எதுவும் கூட வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், நேற்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயதாரணி, “நான் இருப்பதையும் விட்டுவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தேன். எம்.எல்.ஏ, தேசிய பொதுச்செயலாளர், சட்டமன்ற கொறடா போன்ற முக்கிய பொறுப்புகளை விட்டுவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தேன். எதிர்பார்ப்போடுதான் பா.ஜ.க.,வுக்கு வந்தேன். நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக பதவி தேவை. 6 மாதம் ஆகிவிட்டது, இன்னும் பதவி கொடுக்கவில்லை. பிரச்சனை இல்லை. நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எனக்கு நல்லது பண்ணுவீங்க என்று எனக்கு நன்றாகத் தெரியும். என்னைப் போன்றவர்களின் பணியை பா.ஜ.க நிச்சயம் பயன்படுத்தும்.” என்று கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த விஜயதாரணி, “நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட் வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு தரப்பட்டது. ஆனாலும் மன வருத்தம் இன்றி அவருக்காக தேர்தல் பணியாற்றினேன். அந்த வாய்ப்பு இல்லை என்றாலும் கட்சியில் பதவி தரப்படும் என நினைத்தேன். எப்போது புது பதவி வரும் என எனக்கு நாள்தோறும் செல்போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. பதவியே தரவில்லை என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பு கேட்டேன். பா.ஜ.க.,வில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை பார்க்க முடிகிறது. எனக்கும் வாக்குறுதி அளித்துள்ளனர். பா.ஜ.க.,வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் கட்சிப் பதவி என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். எனக்கு அங்கீகாரம் தருவோம் என அண்ணாமலை நான் பேசிய அதே மேடையில் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜயதாரணி, “ராகுல் காந்தியை பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியில் அவர் பதவியை எதிர்பார்த்ததாக பேசப்பட்டது. அப்போது, நீங்கள் தமிழகத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக இருக்கும் நிலையில், தனிக் கட்சி ஆரம்பித்தால் பெரிய தலைவராக வருவீர்கள் என ராகுல் காந்தி சொன்னதால், அது விஜய்யின் சிந்தனையில் இருந்துள்ளது. அது நடந்து பல ஆண்டுகள் கழித்து தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார். ஆகவே, விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு ராகுல் காந்திதான் காரணம் என்று நினைக்கிறேன்” என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“