தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், இந்த பதிவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுனரை சந்திக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து திமுக பாஜக இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து இந்த மோதல் பெரிய பூதாகராமாக வெடித்து வருகிறது. இந்த மோதலில் பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதற்கு திமுக வட்டாரமும் பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அன்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் அண்ணாமலை ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்றும், ரூ 500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சொத்து குறித்து ஆங்கிலத்தில் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ பதிவு உண்மையில்லை. என்னை பற்றி வெளியாகி வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் அளித்ததே இல்லை. இதற்கும் அப்படித்தான் என்று கூறியுள்ளார்.
இதனிடையே இன்று பாஜக முக்கிய தலைவர்கள் ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளனர். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பாஜகவின் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil