கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது நடவடிக்கை, திமுக அரசின் நடவடிக்கை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், ஆ ராசாவின் கருத்து உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். பாஜக மூத்த தலைவர் சிபி ராதகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்,மற்றும் தொண்டர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய், ஆ.ராசவை கைது செய் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தொண்டர்களை போலீசார் முழு பரிசோதனைக்கு பின்பு ஆர்பாட்டகாரர்களை அனுமதித்தனர்.
தொடர்ந்து இந்த ஆர்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில்,
ராசாவின் கருத்து இந்துகளுக்கு உடன்பாடில்லை. இந்து கடவுள்களை திமுகவினர் இழிவுபடுத்தி வருகின்றார். இந்து எதிர்ப்பு என்பதை கொள்கையாகவே திமுக வைத்துள்ளது. இன்று நிலைமை மாறியிருக்கிறது. இந்துக்கள் ஆயிரக்கணக்கான பேர் நின்று திமுகவை எதிர்த்து கேள்வி கேட்போம்.
தமிழகத்தில் பாஜக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற நிலையில் மாற்றுக்கட்சிகள் பயந்துள்ளனர் அந்தளவிற்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக அரசியல் மேடையில் பேசுவதை, பெண்கள் உட்கார்ந்து கேட்க முடியாது. பாஜகவில் நாகரீகம் இருப்பதால் கூட்டத்தில் பெண்கள் உட்கார்ந்து கேட்க முடிகிறது
தீண்டாமை என்ற மிகப்பெரிய கொடுமையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக சாதியின் அடிப்படையில் சீட்டு வழங்குகிறது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களை தூக்கி விட பாஜக இருக்கிறது. சாதிக்கு எதிரானவர்கள் பாஜக. இந்து சமுதாயத்தில் தீய பழக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ராமனுஜர் குறிப்பிடத்தக்கவர். பாஜகவில், எல்.முருகனை மாநில தலைவராகவும், பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கி, அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. ஆனால் திமுகவில் முதல்வர் நாற்காலியில் ஆ. ராசா உட்கார முடியாது. இதுதான் அவர்களின் சமூக நீதி.
மதமாற்றத்திற்கு எதிராக மத மாற்றம் தவறானது என டாக்டர் அம்பேத்கர் சொன்னதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆ ராசா மதமாற்றத்திற்கு தூண்டுகிறார்.இதற்கு பின்பாக யார் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும். சகோதர, சகோதரிகளை தவறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். கோவை மாநகர் பா.ஜ.க மாவட்ட தலைவரை பொய்யாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அவரது குடும்ப சேனல்கள்தான் அவரை பாராட்டுகின்றனர். எங்கு குளிப்பாட்டி, எங்கு வைத்தாலும், முதலமைச்சர் மாற மாட்டார்.
கோவை மாநகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் அனைத்து கட்சி கூட்டம் போட்டார். ஆனால் திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர், சட்ட விரோதமாக திமுகவின்ர் வைத்திருக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.