தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. அதில் திருச்சிக்கான திட்டங்களும் இடம்பெற்றன என்றாலும், இன்னும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என திருச்சி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர்.
திருச்சி மாவட்டத்திற்கு 2024-25 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்புகள் குறித்த முழு விவரம் வருமாறு; திருவெறும்பூர் பகுதியில் உயர் பாதுகாப்பு கொண்ட நவீன சிறைச்சாலை திருவெறும்பூர் பகுதியில் ரூ.104 கோடி மதிப்பில் கட்டப்படும் என்ற அறிவிப்பும், திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும் என்பதும், திருச்சி மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்படும், அரசு தனியார் பங்களிப்பு முறையில் பொதுக்கழிப்பிடங்களை நவீன முறையில் சீரமைத்து, பராமரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்
திருச்சியில் ஓடும் காவிரி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் திருச்சி மாவட்டத்திற்காக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்.
திருச்சியில் ரூ.345 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது அவைகள் விரைவில் செயலுக்கு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.
கல்லணை கால்வாயினை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.1,037 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ள நிலையில், 2-ம் கட்டமாக வரும் நிதியாண்டில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்ற நிலையை வரவேற்கின்றோம்.
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடர்பாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததும், மெட்ரோ தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததும் மக்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது.
திருச்சி பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு ரோப் கார் வசதி, திருவெறும்பூர், மண்ணச்சல்லுாரில் தாலுகா நீதிமன்றங்கள், குழுமணியில் பூச்செண்டு தொழிற்சாலை அமைக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏமாற்றமே என்கின்றனர் திருச்சி வாழ் மக்கள்.
இந்த பட்ஜெட் குறித்து சிறுகுறு தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கையில், தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் மின் கட்டண குறைப்பு தொடர்பான கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டது, மானியங்கள் ஒதுக்கீடு செய்யாதது, ஏற்கனவே தொழில் முனைவோர்கள் கொடுத்த கோரிக்கைகளுக்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றனர்.
மொத்தத்தில் திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை வரவேற்கின்றோம் என்ற குரல் அதிகரித்திருந்தாலும், சிறுகுறு நிறுவனத்தாரின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாதது ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது எனலாம்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“