அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்தியுள்ளார்.
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, டி.ஆர்.பி.ராஜாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு,பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையும், திமுக எம்.பியுமான டி.ஆர்.பாலு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவேன். உங்கள் அனைவரது வாழ்த்திற்கும் மிக்க நன்றி என்று கூறினார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, 'டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டிஆர்பி ராஜா மிச்சிறப்பாக பணியாற்றி முதல்வரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள். அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும்' என்று கூறினார்.
மன்னர்குடி தொகுதியில் இருந்து 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் டி. ஆர். பி. ராஜா வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டில் திமுகவின் என்.ஆர்.ஐ விங்கின் முதல் செயலாளராக ராஜா நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டிலும் அதே மன்னார்குடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இவர் திமுக ஐடி விங் மாநில செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.