சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 1.3 லட்சமாக இருந்த இத்தகைய சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளின் எண்ணிக்கை தற்போது 2025 ஆம் ஆண்டில் 2.1 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளை ஏற்படுத்தியுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலத்திற்குள் இணைப்புகளை அகற்றாவிட்டால், அவை துண்டிக்கப்படுவதுடன், ரூ5,000 அபராதமும் விதிக்கப்படும். பெரிய கட்டிடங்களுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய துணை மேயர் எம்.மகேஷ் குமார், "பொதுமக்கள் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும். இது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், மழை பெய்யும் போது வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சூழ்வதற்கு காரணமாகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றத்தை கண்டறிந்து தடுக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சி முழுவதும் 1,833 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் அகற்றப்பட்டன. மேலும், வடிகால்களை மாசுபடுத்திய குடியிருப்பாளர்களிடம் இருந்து ரூ5.98 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை (9-வது மண்டலம்) பகுதியில் 336 சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டு ரூ55,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை மண்டலம் 195 வழக்குகளுடனும், கோடம்பாக்கம் (10-வது மண்டலம்) 193 வழக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இருப்பினும், சட்டவிரோத இணைப்புகளை அகற்றுவது மட்டும் போதாது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் அதனை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை அருகே உள்ள பிரபலமான வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் கழிவுநீர் இணைப்பு இல்லை. இரவில், அவர்கள் தனியார் லாரிகளை வாடகைக்கு எடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீரை கொட்டுகின்றனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் கூறுகையில், "சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டப்படும் முக்கிய இடங்களை மாநகராட்சி கண்காணித்து வருகிறது. சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான கட்டளைகள் புதன்கிழமை (இன்று) நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.