பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உட்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிபதிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பொள்ளாச்சியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இந்த வழக்கில் விவாதம் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வரும் மே 13-ந் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று, கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி, நந்தினி தேவி அறிவித்திருந்தார். இதனால் இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியும் இடம் பெற்றுள்ளார்.
பணியிட மாற்ற அறிவிப்பில், நீதிபதி நந்தினி தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.