தமிழகத்தில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல், தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று சென்னைக்கு 260 கிலோமீட்டர் தென்- தென்கிழக்கே நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு புயல் கரையை கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதால் மரங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு எல்லோ அலெர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் கரையை கடக்கும் என்பதால் 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. புறநகர் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும் என்றும், பாதுகாப்பு தேவைப்படடால் இரவு நேரங்களில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil