/indian-express-tamil/media/media_files/2024/11/28/IRuStUaZRga1vJkx0NG9.jpg)
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்து 43 நாட்களே ஆன குழந்தையை தாயே கொலை செய்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் கூறியதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண். அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறா. இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
கணவர் வேலைக்கு சென்றதை தொடர்ந்து மனைவி பாரதி தனது 2 பெண் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த நிலையில், திடீரென ஒரு பெண் குழந்தை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த மாமியார் மற்றும் அண்ணி இருவரும் விசாரித்தபோது, குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு சமையலறைக்கு சென்று வருவதற்குள் ஒரு குழந்தையை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாரதியின் பேச்சால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த நீலாங்கரை போலீசார் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தாய் பாரதியிடம் நடத்திய விசாரணையில், அவரே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குழந்தையை கட்டப்பையில் போட்டு வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் வீசியதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இறந்த நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாய் பாரதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த்தால் பாரதி அதிகளவில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.