Chennai News Highlights: 48 ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழுக்கூட்டம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madurai pothukulu

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 31, 2025 21:56 IST

    மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது - கார்கே

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார். முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகானிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைக் கேட்க முடியும் என கார்கே தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



  • May 31, 2025 21:34 IST

    பொறியியல் கலந்தாய்வு-2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

     கடந்த 25 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும்; 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.



  • Advertisment
  • May 31, 2025 20:55 IST

    கைவிடப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்கள்- சு. வெங்கடேசன்

    தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



  • May 31, 2025 20:36 IST

    வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா? - விளக்கம்

    வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டதாக பரவும் தகவலுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன்படி வந்தே பாரத் ரயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 31, 2025 20:13 IST

    துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி - மோடி

    துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவால் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். நமது ஆயுதப் படைகள் பல கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பயங்கரவாதிகளை அவர்களின் இடத்திலேயே தாக்கி அழித்தனர். இதை பாகிஸ்தான் ஒருபோதும் கனவில்கூட நினைத்திருக்காது” எனத் தெரிவித்தார்.



  • May 31, 2025 19:38 IST

    14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 19:12 IST

    தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு அனுமதி

    அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் நியமனம் செய்து கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.



  • May 31, 2025 17:58 IST

    ஆபரேஷன் ஷீல்ட் - சிவில் பாதுகாப்பு ஒத்திகை

    ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை மாநிலங்களில், வெளி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, மத்திய அரசு 'ஆபரேஷன் ஷீல்ட்' (Operation Shield) என்ற பெயரில் பெரிய அளவிலான சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 31, 2025) ஒரு முக்கிய ஒத்திகை பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது



  • May 31, 2025 17:45 IST

    ஆசிய தடகளம்: தமிழக வீராங்கணை வெள்ளி வென்று அசத்தல்

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - மகளிர் 4*100  ரிலே ஓட்டத்தில் 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் வெள்ளி பதக்கம் வென்றார்.  

    43.28 வினாடிகளில் இலக்கை எட்டிய சீனா தங்கம் வென்றது. 43.86 வினாடிகளில் இலக்கை எட்டிய இந்தியாவுக்கு வெள்ளி



  • May 31, 2025 17:27 IST

    சென்னையில் 40° மேல் தாண்டாத வெப்பம்

    சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40° மேல் வெப்பம் பதிவாகவில்லை

    -இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா



  • May 31, 2025 16:54 IST

    நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்

    சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜேஷின் உடல் இன்று (மே 31) அடக்கம் செய்யப்பட்டது. 



  • May 31, 2025 16:13 IST

    நாடு முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,395-ஐ எட்டியுள்ளது. நேற்று (மே 31) ஒரே நாளில் 685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தவிர, 265 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்திர பிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர்.



  • May 31, 2025 15:51 IST

    கொரோனா அறிகுறி - கர்நாடக அரசு அறிவுறுத்தல்

    கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 15:31 IST

    சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்திற்கு சீல்

    சென்னை, கே.கே. நகர் பகுதியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, விதிமுறைகளை மீறி கட்டடத்தை கட்டியதாகக் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 15:20 IST

    வீரத்தின் அடையாளமாக குங்குமம் மாறிவிட்டது - மோடி பேச்சு

    பெண் சக்தியின் சின்னமான குங்குமம், தற்போது வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், "பாகிஸ்தான் ராணுவம் நினைத்து பார்க்காத பகுதிகளில், பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 31, 2025 15:02 IST

    கூட்டணி அமைத்தால் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்போம் - பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம் பேச்சு 

    "பா.ம.க கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்போம். கட்சியில் தற்போது நிலவும் குழப்பங்கள் நீர்குமிழி போல தற்காலிகமானவைதான், விரைவில் இது முடிவுக்கு வரும். பா.ம.க-வுக்கு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என நல்ல காலம் தொடங்கியுள்ளது" என்று பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். 

     



  • May 31, 2025 14:59 IST

    ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறியும் வருகிறார்கள். 



  • May 31, 2025 14:57 IST

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு 

    தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து நீக்கம். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீக்கியதாக இரண்டாம் ஆண்டு மாணவர் அஸ்லாம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



  • May 31, 2025 14:16 IST

    நானே பாமக தலைவர்: அன்புமணி திட்டவட்டம்

    சென்னை அருகே சோழிங்கநல்லூரில் பா.ம.க நிர்வாகிகள் உடன் 2-வது நாளாக அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கட்சியை மேலும் வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்க புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் எங்கள் குலசாமி, குலதெய்வம். பா.ம.க நிறுவனர் ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம். ராமதாஸ் வழிகாட்டி, பா.ம.க-வின் தலைவர் நான்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

     



  • May 31, 2025 13:40 IST

    சென்னையில் கோடைகால மழை 129% கூடுதலாக பதிவு!!

    சென்னையில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 129% கூடுதலாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் 48.8 மி.மீ மழைப் பதிவான நிலையில், நடப்பாண்டில் 111.7மி.மீ மழை பெய்துள்ளது.



  • May 31, 2025 12:37 IST

    அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

    தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதால் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



  • May 31, 2025 12:36 IST

    சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்!

    சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 2024 பிப்ரவரியுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கக் கோரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிட்டும் இறுதி செய்யப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், சென்னையில் சுமார் 450 மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் இயங்கி வரும் நிலையில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 12:30 IST

    2ஆவது நாளாக அன்புமணி ஆலோசனை தொடக்கம்

    பாமக நிர்வாகிகளோடு அன்புமணி 2ஆவது நாளாக நடத்தும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 2ஆவது நாளாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது; கூட்டத்தில், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பங்கேற்றுள்ளனர். 



  • May 31, 2025 12:17 IST

    ராமதாஸும் அன்புமணியும் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன்: ஜி.கே.மணி பேட்டி

    விழுப்புரம்: ராமதாஸும் அன்புமணியும் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு நான் காரணம் எனக் கூறுவது அபாண்டமானது. பாமகவை விட்டு நான் விலக உள்ளதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ராமதாஸ் – அன்புமணி சந்தித்துவிட்டால் பாமக வீறுகொண்டு எழுந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.



  • May 31, 2025 12:03 IST

    நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு!

    நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் மதுபான கூட தகராறு தொடர்ந்த நடிகை ரோஜா ஸ்ரீ கணவர் மே 25ல் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த ஆவணங்களையும், ரூ.1.5 லட்சம் பணத்தை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறியிருந்தார்.



  • May 31, 2025 11:34 IST

    ‘‘கொரோனா பரவல் - பதற்றம் வேண்டாம்’’

    தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம். ஒமைக்ரான் வகை கொரோனாவால் பதற்றம் அடைய தேவையில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • May 31, 2025 10:37 IST

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒருவர் பலி.



  • May 31, 2025 10:05 IST

    மதுரைக்கு என்ன செய்தீர்கள் முதல்வரே? - செல்லூர் ராஜூ

    மதுரை வரும் முதல்வரே நீங்கள் நடக்க புதிய ரோடுகள் ஆனால் மக்கள் நடப்பது? 2022யில் ரூ. 280 கோடியில் ஸ்டாலின் அறிவித்த ஐடி பார்க் திட்டம் எங்கே? திட்டமிடலே இல்லாத மேம்பாலங்களால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 



  • May 31, 2025 10:04 IST

    மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் தொடர் ஆலோசனை

    விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் மூத்த நிர்வாகிகளை இன்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கிறார். ஏற்கனவே தீரன் உள்ளிட்டவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை செய்த நிலையில் இன்றும் பலரை சந்திக்கிறார்.



  • May 31, 2025 08:45 IST

    தங்கம் வென்ற இந்திய வீராங்கனை 

    100 மீட்டர் தடை ஓட்டம், குண்டு எறிதல் உள்பட  7 பந்தயங்களை கொண்ட ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா தங்கம் வென்றார். ஹெப்டத்லானில் தங்கம் வென்ற 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.



  • May 31, 2025 08:42 IST

    அரசுப்பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வு

    தமிழகத்தில் அரசு பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வுபெறுகின்றனர். நடப்பு ஆண்டில் ஒரே நாளில் இவ்வளர் பேர் ஓய்வு பெறுவது அதிகபட்சமாக உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதியில், (மே 31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது,



  • May 31, 2025 08:09 IST

    ராமேஸ்வரத்தில் ஆளுநர் சுவாமி தரிசனம் 

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் 



  • May 31, 2025 08:09 IST

    இந்திய வீராங்கனை பூஜாசிங் சாதனை

    ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்SHOE கிழிந்த நிலையில் இருந்தபோதும்,  தனது விடா முயற்சி மற்றும் திறமையால் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்



  • May 31, 2025 08:07 IST

    கேரளாவில் தொடரும் கனமழை: ஒரே நாளில் 10 பேர் மரணம்

    கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் நேற்று மட்டும் 10 பேர் மரணடைந்துள்ளனர். மேலும், ஆலப்புழா, கோட்டயம், கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • May 31, 2025 08:05 IST

    கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர். ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.



  • May 31, 2025 07:24 IST

    எலிமினேட்டர் 1 சுற்றில், குஜராத்தை வீழ்த்தியது மும்பை

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்திய மும்பை அணி, எலிமினேட்டர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் 2 சுற்றில், பஞ்சாப் - மும்பை அணிகள் மோதுகின்றன.



  • May 31, 2025 07:21 IST

    காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, திருப்பூர், கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: