Chennai News Updates: பா.ஜ.க-வை விரட்ட தமிழ்க் கடவுள் முருகன் தயாராக இருக்கிறார் - செல்வப்பெருந்தகை

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 10, 2025 22:57 IST

    பா.ஜ.க-வை விரட்ட தமிழ்க் கடவுள் முருகன் தயாராக இருக்கிறார் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நடைபெற்ற 'முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள்' பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "தமிழ்க்கடவுள் முருகன் தயாராக இருக்கிறார்; 2026 தேர்தலில் புல்லுருவிகளை (பா.ஜ.க) சூரசம்ஹாரம் செய்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற தயாராக இருக்கிறார். பா.ஜ.க-வை விரட்டி அடிக்கப்போகின்ற மாநிலம் தமிழ்நாடேதான்" என்று தெரிவித்தார்.



  • Jun 10, 2025 22:06 IST

    பயங்கரவாதத்தை சமாளிக்க முடியாவிட்டால் இந்தியாவிடம் பாகிஸ்தான் உதவி கோர வேண்டும்: டேராடூனில் ராஜ்நாத் சிங்

    பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணைத் தலைவராக பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் நியமித்ததற்கு அதிர்ச்சி தெரிவித்த ராஜ்நாத் சிங், “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த நடவடிக்கை, பூனையிடம் பாலை காவல் காக்கச் சொல்வதற்கு ஒப்பாகும்,” என்றார்.

    டேராடூனில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்த ஒரு கலந்துரையாடலின் போது பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் சென்ற வெவ்வேறு பாதைகள் குறித்து அவர் பேசினார். "இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே நேரத்தில் சுதந்திரம் அடைந்தன, ஆனால், இன்று, இந்தியா 'ஜனநாயகத்தின் தாய்' என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதத்தின் தந்தையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது, தனது மண்ணில் அவர்களுக்கு பயிற்சி அளித்து உதவியுள்ளது... இந்த பயங்கரவாதிகளையும் அவர்களின் முழு உள்கட்டமைப்பையும் நாம் ஒழிப்பது முக்கியம்," என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

    பயங்கரவாதத்தை தனது மண்ணில் சமாளிக்க முடியாவிட்டால், பாகிஸ்தான் இந்தியாவின் உதவியை நாட வேண்டும் என்று அவர் கூறினார். "இந்திய ஆயுதப் படைகள் எல்லைக்கு இருபுறமும் பயங்கரவாதத்திற்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்கக்கூடியவை, இது ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானே கண்டது," என்று அவர் தெரிவித்தார்.



  • Advertisment
  • Jun 10, 2025 20:57 IST

    ‘கூட்டணி ஆட்சி என யார் சொன்னது? அ.தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும் - ராஜேந்திர பாலாஜி

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  “2026ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என யார் சொன்னது?, இ.பி.எஸ் தலைமையில் தான் ஆட்சி நடக்கும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அ.தி.மு.க-வை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும், துணிச்சலும் கிடையாது. அ.தி.மு.க-விற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. 
    இ.பி.எஸ் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு அவர் இருக்க மாட்டார்” என்று கூறினார்.



  • Jun 10, 2025 20:46 IST

    ராமேஸ்வரம் கோயிலில் கட்டண வசூல்: திரும்பப்பெற இ.பி.எஸ் கோரிக்கை

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி, "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பர்ய தரிசன வழி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது. ரூ.200 செலுத்தி தரிசிக்கலாம் என்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது. எனவே, இந்தக் கட்டண வசூல் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 10, 2025 20:41 IST

    சென்னையில் பிங்க் ஆட்டோ விபத்து; போலீசார் விளக்கம்

    சென்னை கதீட்ரல் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் செம்பருத்தி, செல்போன் பேசிக்கொண்டு ஆட்டோ ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. சாலை பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டதாக
    பெண் ஆட்டோ ஓட்டுநர் குற்றம்சாட்டிய நிலையில் ஆட்டோ அதிவேகமாக வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.



  • Jun 10, 2025 20:39 IST

    வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் டெல்லியில் மோடியுடன் சந்திப்பு

    ளிநாடுகளுக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வலியுறுத்தியுள்ளனர்.



  • Jun 10, 2025 19:56 IST

    மாலத்தீவு சுற்றுலா விளம்பர தூதராக கத்ரினா கைஃப் நியமனம் 

    பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் மாலத்தீவு சுற்றுலாவின் சர்வதேச விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா உடனான மோதல் போக்கை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அடுத்த மாதம் பிரதமர் மோடி மாலத்தீவு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Jun 10, 2025 19:25 IST

    காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 25 பேர் பலி 

    காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது.



  • Jun 10, 2025 19:22 IST

    போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு முயற்சி: பா.ஜ.க பெண் நிர்வாகி கைது

    சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்புக்கு முயன்றதாக, பா.ஜ.க.வின் வட சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாமுண்டீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில், சென்னை வடசென்னையில் ஒரு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில், போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சாமுண்டீஸ்வரி இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வருவோரின் பத்திரப்பதிவு ஆவணத்தில் உள்ள பெயர்களை மாற்றியதும், மின் இணைப்புப் பெயர்களையும் மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிகள் மூலம், ஒரு நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சாமுண்டீஸ்வரி முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

     



  • Jun 10, 2025 18:36 IST

    கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் இ-பாஸ் மட்டுமே - சென்னை ஆட்சியர்

    சென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-டிரான்ஸிட் பாஸ் (e-Transit Pass) இணையம் வழியாக மட்டுமே வழங்கப்படும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார்



  • Jun 10, 2025 18:34 IST

    சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

    சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 10 விமானங்கள் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது



  • Jun 10, 2025 17:55 IST

    சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

    சென்னையில் 12.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 10, 2025 17:44 IST

    கல்வித் துறையை சீரமைப்பதில் அக்கறை காட்டாதது ஏன்?

    ஒரு காலத்தில் ஆன்றோர்களால் "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, "கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக" திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



  • Jun 10, 2025 17:23 IST

    சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. அம்பத்தூர், அன்னாநகர், ஆவடி, கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.



  • Jun 10, 2025 17:21 IST

    ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு -10 பேர் உயிரிழப்பு

    ஆஸ்திரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஆசிரியர்களும் அடக்கம். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Jun 10, 2025 17:18 IST

    கர்ப்பிணிகள், முதியோர் முகக்கவசம் அணிவது நல்லது- மா.சு

    பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் மாஸ்க் அணியலாம். கர்ப்பிணிகள், முதியோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று புதுக்கோட்டையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.



  • Jun 10, 2025 16:55 IST

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வறை

    தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்களுக்காக ஏசி ஓய்வறை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது. இதையடுத்து, கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் கொண்ட AC ஓய்வறை, சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை அடிப்படையில் அண்ணா நகர், கே.கே.நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளது.



  • Jun 10, 2025 16:51 IST

    16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



  • Jun 10, 2025 16:44 IST

    ”2025 இறுதியில் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும்”

    2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.



  • Jun 10, 2025 16:44 IST

    ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 நண்பர்கள் உயிரிழப்பு

    ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 10, 2025 16:43 IST

    "2026-ல் NDA தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும்"

    புதுச்சேரியில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.



  • Jun 10, 2025 16:35 IST

    விண்வெளிக்குச் செல்லும் அல்வா, பிரியாணி!

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா, கேரட் அல்வா, இட்லி, பிரியாணி போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்கிறார். இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார் போல் பிரத்யேகமாகத் தயாரித்து அனுப்பி வைக்கிறது; விண்வெளியில் தங்கியிருக்கும்போது வீட்டு உணவை சுவைப்பது போன்ற அனுபவத்தைப் பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Jun 10, 2025 16:26 IST

    சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிலஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, நேற்று (ஜூன் 9) மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.



  • Jun 10, 2025 16:25 IST

    தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து எ.வ.வேலு விடுவிப்பு

    2011-ம் ஆண்டு தேர்தலின்போது விதிகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து அமைச்சர் எ.வ.வேலுவை திருவண்ணாமலை நீதிமன்றம் விடுவித்துள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாததால் எ.வ.வேலு விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.



  • Jun 10, 2025 16:14 IST

    ஆர்.சி.பி. அணியை விற்க உரிமையாளர் முடிவு?

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணியின் உரிமையாளரான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jun 10, 2025 16:08 IST

    24 மணி நேரத்தில் புதிதாக 324 பேருக்கு கொரோனா உறுதி

    செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.



  • Jun 10, 2025 16:07 IST

    20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு 14ம் தேதி வெளியீடு

    நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.



  • Jun 10, 2025 16:06 IST

    10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம்-அன்புமணி

    10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். மேலும் 10 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜூன் 15, 16, 18, 19 தேதிகளில் அன்புமணி சந்திக்கவுள்ளார். அந்த சந்திப்பில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. 



  • Jun 10, 2025 16:05 IST

    சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம்

    சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. மூடா (MUDA) வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.



  • Jun 10, 2025 16:05 IST

    மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை: சேகர்பாபு

    தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக, முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உ.பி.யில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை, இதை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது,” இவ்வாறு கூறினார்.



  • Jun 10, 2025 16:04 IST

    சென்னை புத்தகப் பூங்கா: ஸ்டாலின் திறந்து வைத்தார்

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.29.80 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



  • Jun 10, 2025 16:03 IST

    16 மாவட்டங்களில் மாலை 5.40 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மாலை 5.40 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 10, 2025 15:34 IST

    தமிழ்நாட்டுக்கு நிதியை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியை, வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை மத்திய அரசும், 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது.

    - வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம்



  • Jun 10, 2025 15:05 IST

    புதிய நிர்வாகிகளை அறிவித்த ராமதாஸ்

    திருவண்ணாமலை மேற்கு மாவட்டத் தலைவராக சுமன், கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத் தலைவராக முருகானந்தம், மேற்கு மாநகரச் செயலாளராக சிலம்பரசன் நியமனம்



  • Jun 10, 2025 15:03 IST

    பாமகவிலிருந்து பாலு நீக்கம்

    பாமகவிலிருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி அவருக்கு பதிலாக வி.எஸ்.கோபு வழக்கறிஞர் சமூகநீதி பேரவையின் தலைவராக நியமனம்

    - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு



  • Jun 10, 2025 14:33 IST

    சிந்தனையை உயர்த்திடும் நூல்கள்: மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • Jun 10, 2025 13:49 IST

    சித்தராமையாவிற்கு தொடர்புடைய சொத்துகள் முடக்கம்

    மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தொடர்புடைய சொத்துகள் முடக்கப்பட்டன. அதன்படி, ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.



  • Jun 10, 2025 13:37 IST

    டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து - 3 பேர் உயிரிழப்பு

    டெல்லி, துவாரகா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Jun 10, 2025 13:09 IST

    கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்

    கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டி இருக்கின்றன எனவும், அறிவியல் பூர்வமான முடிவுகள் வெளியான பிறகே அதனை அங்கீகரிக்க முடியும் என்றும் மத்திய கலாசார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.



  • Jun 10, 2025 12:53 IST

    தமிழகத்தின் ஓரிரு இடங்களுக்கு ரெட் அலர்ட்

    ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.



  • Jun 10, 2025 12:30 IST

    பா.ம.க நிர்வாகிகளை மீண்டும் மாற்றிய ராமதாஸ்

    சென்னையில் இருந்து தைலாபுரம் திரும்பிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மீண்டும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி ,மாநில துணை தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக ராசா சங்கரும், கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 10, 2025 12:24 IST

    உலக வங்கி உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் - ஸ்டாலின்

    உலக வங்கி உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இஞ்சினாக தமிழ்நாடு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 10, 2025 12:07 IST

    உலக வங்கியின் உடனான வணிக உறவு பல நட்புகளை கொடுத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    உலக வங்கியின் உடனான வணிக உறவு பல நட்புகளை கொடுத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தபின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 20 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கி பங்கு உள்ளது. சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2023ன் கணக்குப்படி தமிழ்நாட்டில் 63 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிக்கின்றனர். தமிழ்நாடு நீர்வளம், நிலவளம் திட்டம் நவீனமயமாக்கலுக்கு வித்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு உலக வங்கிகள் நிதி அளித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



  • Jun 10, 2025 12:06 IST

    தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

    சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையம் திறக்கப்பட்டது. நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



  • Jun 10, 2025 11:51 IST

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

    கூட்டணி கட்சிகளை மதிப்பதில் திமுகவை எந்த குறையும் சொல்ல முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற கொள்கையின் படி குறைந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அதே நடைமுறை எதிர்வரும் தேர்தலிலும் தொடரக்கூடாது. 2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.



  • Jun 10, 2025 11:49 IST

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம், கமல்ஹாசனின் வேட்புமனுவை ஏற்றார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் வில்சன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது.



  • Jun 10, 2025 11:49 IST

    வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது தமிழ் மரபை சிதைக்கும் செயல்: சு.வெங்கடேசன்

    வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது தமிழ் மரபை சிதைக்கும் செயல் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,”வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதை வெறும் பொய் என்று கருதாமல் தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்துவாவின் அரசியல் தாக்குதல் என கண்டறிவது தான் மெய் பொருள் காணும் அறிவு.”எனத் தெரிவித்துள்ளார்.



  • Jun 10, 2025 11:16 IST

    அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் : வழக்கறிஞர் சூரியமூர்த்தி

    மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். இரட்டைஇலை சின்னம் தொடர்பான வழக்குநிலுவையில் உள்ளதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.



  • Jun 10, 2025 11:16 IST

    தக் லைஃப் வழக்கு ஒத்திவைப்பு

    கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு ஒத்திவைப்பு வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு. 13ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்றிருந்த நிலையில் அதே நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Jun 10, 2025 10:53 IST

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: