கோவை மாணவி லோகேஸ்வரி துயர மரணம்: இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் அன்பழகனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசானி ஆலோசனை நடத்தினார். அரசு தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
கோவை மாணவி லோகேஸ்வரி மரணம், தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கிறது. நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியின் மாணவி அவர்! நேற்று அங்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், லோகேஸ்வரி என்ற மாணவி படுகாயம் அடைந்தார். பின்பு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கோவை மாணவி லோகேஸ்வரி
லோகேஸ்வரியின் மரணத்திற்கு, எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயிற்சி நடந்ததே காரணம்! பயிற்சி என்ற பெயரில் மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை தொடர்ந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
லோகேஸ்வரி மரணம் குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தவறு இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவை மாணவி லோகேஸ்வரி மரணம் .. அரசு நடவடிக்கை:
இந்த ஆலோசனையில், பயிற்சியில் என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நேராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
லோகேஸ்வரியின் குடும்பச் சூழல்கள், குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து அரசு தரப்பில் விசாரிக்கப்படுகிறது. குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் என்ன மாதிரியான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முதல்வரின் ஆலோசனை அமைந்து வருகிறது.
லோகேஸ்வரி: பேரிடர் மீட்பு பயிற்சியில் அநியாயமாக கொல்லப்பட்ட கோவை மாணவி! To Read, Click Here
உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல், மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி இது போன்ற பயிற்சிகளில் தள்ளக்கூடாது என அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது.
கோவை மாணவி லோகேஸ்வரியை, அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் மீட்டுக் கொண்டு வந்து விடாது. எனினும் மேற்கொண்டு இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுப்பது முக்கியம்!