/indian-express-tamil/media/media_files/2025/08/04/vinfast-2025-08-04-13-39-09.jpg)
தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் கார் ஆலையில் தயாரான முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். மேலும், தொழிலாளர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அடங்கும். முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 3,500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு அதிகாரிகள், வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகள், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.