அகத்தில் இருக்கும் கண் நல்லக்கண்ணு என்று கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். அவருக்கு தகைசால் விருது வழங்கியதால் நான் பெருமை பெற்றேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தோழர் நல்லக்கண்ணுவுக்கு தகைசால் விருது வழங்கியதால் நான் பெருமை பெற்றேன் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நல்லக்கண்ணு அய்யாவை வாழ்த்துவதற்காக நாங்கள் வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம். சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் பணியில் எங்களை வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். தந்தை பெரியாருக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லக்கண்ணுவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்து வழிகாட்டியாகவும், தமிழ் சமூகத்திற்காக உழைக்க இன்னும் தயாராக இருக்கிறேன் என கூறி உள்ளம் உறுதியோடு இருக்கும் ஐயாவுக்கு கம்பீரமான செவ்வணக்கம்.
இந்த நேரத்தில், ”எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்ற புரட்சி கவிஞர் பாரதியாரின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. தோழர் நல்லக்கண்ணுவின் தொண்டு எல்லோரையும் ஒன்றாக்கியுள்ளது. இவரது 80-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கலைஞர் கருணாநிதி, வயதில் எனக்கு தம்பியாக இருக்கலாம். ஆனால் அனுபவத்தில் எனது அண்ணன் என்று குறிப்பிட்டார். கலைஞர் கார் விபத்தில் ஒரு கண் பழுதுபட்டபோது, எனக்கு ஒரு கண் உடலில் இருக்கிறது மறு கண் அகத்தில் இருக்கிறது அதுதான் நல்லக்கண்ணு என்று கூறியிருந்தார்.
தோழர் நல்லக்கண்ணுவுக்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தார் கலைஞர் கருணாநிதி. அவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு நான் தகைசால் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதுடன் அவருக்கு ரூ10 லட்சம் வழங்கப்பட்டது. அதனுடன் ரூ5000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரமாக தமிழக அரசுக்கே நிவாரண நிதியாக வழங்கினார். இயக்கம் வேறு தான் வேறு என்று இருக்காமல் உழைப்பால் கிடைத்த பணத்தை கட்சிக்காவே கொடுத்தவர்.
பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் மூன்றும் இங்கு சங்கமமாகி உள்ளது. நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை விட, நமக்கு பெரிய பெருமை எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது முதலில் கண்டன அறிக்கை வெளியிட்டது நல்லகண்ணு தான். அதிமுக உடன் கூட்டணியில் இருந்தபோதே, அதிமுகவை கண்டித்தவர் என்று புகழராம் சூட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“