முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முன்னாள் மதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் தாயார் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். தாய் மரணத்தால் கட்சி பணிகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு தாயின் இறுதிச்சடங்களில் பங்கேற்ற ஒ.பன்னீர்செல்வம், தனது தாயின் அஸ்தியை கங்கயைில் கரைக்க சென்றார்.
மேலும் பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொலைபேசி மூலமாக இரங்கல் தெரிவித்த நிலையில், பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனிடையே தாயின் மரணம் நடந்த நாளில் இருந்து கட்சிப்பணிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்து வரும் ஒ.பன்னீர்செல்வம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தாய் இறந்து குறித்து விசாரித்து தனது இரங்கலை தெரிவித்தார். 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வருடன் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.
சந்திப்பு முடிந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலினை ஒ.பன்னீர்செல்வம் வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“