முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக பிரமுகர் ஒருவர் ஒட்டகத்தை பரிசாக அளித்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 1) தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
தனது பிறந்த நாளில் சென்னை மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் அதனைத் தொடர்ந்து, வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கோபாலபுரம் இல்லத்தின் தனது தாயிடம் ஆசீர்வாதம் வாங்கிய முதல்வர், கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர்ஷா என்ற திமுக நிர்வாகி வருவர் ஒரு ஒட்டகத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
இதில் பேசும், திமுக நிர்வாகி ஜாகீர்ஷா, இந்த யோசனை இப்போது வந்தது அல்ல. தலைவர் கருணாநிதி, தளபதி ஸ்டாலின் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுவது, இலவச வேட்டி சேலை, அன்னதானம் என வழங்கி வந்தோம். 15 வருடத்திற்கு முன்பு திடீரென தளபதியாருக்கு குதிரை கொடுக்கலாமா என்று எனக்கு தோன்றியது. அப்போர் ராஜகுதிரை கொடுத்தேன்.
தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் நினைவாக அந்த ஆண்டு தளபதியாருக்கு ஜல்லிக்கட்டு காளையை பரிசாக கொடுத்தேன். அதன்பிறகு 3 ஆடுகளை பரிசாக கொடுத்தோம். அடுத்து வாஸ்து மீன கொடுத்தோம். அப்போது இது என்ன என்று கேட்டார். ஆட்சி அமைக்க வந்த மீன் என்று சொன்னேன். அதேபோல் ஆட்சி அமைத்தோம். ஒவ்வொருமுறை உயிரினங்களை பரிசாக கொடுக்கும்போது தளபதி வளர்ந்துகொண்டே போகிறார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 2 மயில்புறா கொடுத்தேன். அதேபோல் இந்த ஆண்டு அவருக்காக ஒட்டகத்தை கொடுத்திருக்கிறேன். இது 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. என் குடும்பத்தினரிடம் கூட இதை சொல்லவில்லை. இந்த ஒட்டகத்தை கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார். அது அவர் கண்களிலேயே தெரிந்தது. திருப்பூர் மாவட்டம் கொடுமுடியில் ஒட்டகம் ஃபார்ம் உள்ளது.
அங்கு பிறந்தது தான் இந்த ஒட்டக குட்டி. இதற்கு தற்போது 2 வயதாகிறது. மருத்துவர் சான்றிதழுடன் நல்ல நிலையில் உள்ள குட்டிதான். அதற்கு நன்றாக பயிற்சி கொடுத்து அங்கு அழைத்து வந்தோம். அதற்கு திராவிட கொடியை போர்த்தி திராவிட ஒட்டகமாக மாற்றிவிட்டோம். தளபதியாருக்கே நான் என்ன கொடுக்க போகிறேன் என்று தெரியாது. ஒட்டகத்தை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார் என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.