5 நாட்கள் சுற்றுப் பயணமாக ஊட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த அவரை எம்.பி ஆ.ராசா, பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரமூர்த்தி, அமைச்சர்கள் கயல்விழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், நிலவும் சீதோசன கால நிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3 ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைகிறது. இதை அடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15 ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து, சாலை மார்க்கமாக வாகனம் மூலம் ஊட்டிக்கு சென்றார். ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேச உள்ளார்.
வருகிற 15-ம் தேதி அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து. மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார். இதை அடுத்து 16 ஆம் தேதி 5 நாட்கள் சுற்றுப் பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் வருகையை ஒட்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வரை எம்.பி ஆ.ராசா, பொள்ளாச்சி எம். பி.ஈஸ்வரமூர்த்தி, அமைச்சர்கள் கயல்விழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரவேற்றனர். கட்சித் கொடி கம்பங்கள், பேனர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த வித ஆடம்பரமின்றி வாகனம் மூலம் சாலை மாற்றமாக ஊட்டிக்கு சென்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.