/indian-express-tamil/media/media_files/2025/01/14/chennai-style9.jpg)
சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தைத்திருநாளாம் திருநாளையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம் 2025 - நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரரின் சிலையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பரிசளித்தார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி AI-தொழில்நுட்பத்தின் மூலம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
தொடர்ந்து, பால் ஜேக்கப் குழுவினரின் தொடக்க விழா இசை நிகழ்ச்சிகள் மக்கள் மனம் கவரும் வகையில் இருந்தன. பழங்குடியின மக்களின் பண்பாட்டு நடனமான காணிப் பாடல், கணியான் கூத்து, சேவையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளையும், பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடகர் டி.எம். கிருஷ்ணாவின் பாடலையும் முதலமைச்சர், கனிமொழி எம்.பி மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். குறிப்பாக, பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடகர் டி.எம். கிருஷ்ணா பாடியதற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இந்த விழாவில், நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சென்னையில் 18 இடங்களில் (14/01/2025) முதல் 17/1/2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் (14/01/2025) முதல் (17/01/2025) வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலைவிழா நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பெருநகர சென்னைவாழ் பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாகவும், பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னை மாநகரில் நடத்தப்படுகிறது. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.