திருச்சி மாவட்டத்துக்கு தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு இரண்டு நாள் கள ஆய்வுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) பஞ்சப்பூரில் முதல்வர் ஸ்டாலின், தந்தை பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த முனையத்தின் மதிப்பு ரூ.408.36 கோடி. அங்கு கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பிறகு, பேருந்து முனையத்தை சுற்றிப் பார்த்து, பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்திற்கு தி.மு.க அரசில் செய்யப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். அதன்படி, நான் முதல்வன் திட்டத்தில் 68 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டத்தின்கீழ் 86000 குழந்தைகள் சூடான, சுவையான உணவு சாப்பிடுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் திருச்சியில் 4.42 லட்சம் பேர் 1000 வாங்குகிறார்கள்.
*ரூ.26,000 கோடி மெகா திட்டங்கள் திருச்சிக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
*திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், அண்ணா கனரக வாகன சரக்கு முனையம்
*திருச்சியில் 22 ஏக்கர் பரப்பளவில் காய்கறி அங்காடி அமைக்கப்பட உள்ளது.
*திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது.
*ரூ.18 கோடியில் பறவைகள் பூங்கா அமைய உள்ளது.
*சர்வதேச ஒலிம்பிக் அகாடமி, ஜல்லிக்கட்டு அரங்கம், பச்சமலை சுற்றுலா திட்டம், ரூ.3 கோடி மதிப்பிட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம்.
*1100 ஏக்கர் பரப்பளவில் மணப்பாறையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
*மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
*ரூ.400 கோடி மதிப்பிட்டில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
*70,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.4160 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
*கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது .
*ஒத்த செங்கலோடு நிற்கும் எய்ம்ஸ் மாதிரி இல்லாமல், சொன்ன தேதிக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை என்று ஸ்டாலின் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம். பொருளாதாரத்தில் 9.69 விழுக்காடு என்பது தமிழ்நாடு இதுவரை பார்க்காத வளர்ச்சி.
தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஐநா விருதை பெற்றுள்ளோம். சமூக நீதி அரசை உருவாக்கி உள்ளோம். எல்லோருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
விவசாயிகள் எதிர்த்த 3 வேளாண் சட்டங்களுக்கு அ.தி.மு.க ஆட்சி ஆதரவு அளித்தது. 4 ஆண்டுகளில் சரிவில் இருந்து நம்பர் ஒன் மாநிலமாக சாதனை படைத்தோம். இதை விட பெரிய சாதனைகளை படைப்போம். மேற்கண்டவாறு தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
க.சண்முகவடிவேல்