தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான குழந்தைகள் நாய்கள் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துதை தொடர்ந்து, சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
இந்நிலையில், தெரு நாய்களின் இனபெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மருத்துவ வசதிகளை கிராமங்கள் உட்பட மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் முடிவு செய்யப்பட்டது.
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க வேண்டும் என்றும், நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும், 100 கால்நடை அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மாவட்ட அளவில், நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு, வெறிநாய் தடுப்பூசி பணிகள், துறை மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று, உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிக்சை மேற்கொள்ள வசதிகள் இல்லாத பகுதிகளில், கூடுதலாக, அறுவை சிகிச்சை மையங்கள், மற்றும் அதனுடன் இணைந்த நாய்கள் காப்பகங்கள், கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.