/indian-express-tamil/media/media_files/2025/01/28/7DDXJi6BETmC84E9WS67.jpg)
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் , முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்பு, விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம், சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலை என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.
21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்
சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி, வட தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூக நீதிப் போராளிகளான திரு. ரங்கநாதன், ஏழுமலை, சிங்காரவேலு, ஜெகன்நாதன், முனியன், . முத்து, தாண்டவராயன், வீரப்பன், விநாயகம், கோவிந்தன், தேசிங்கு, அண்ணாமலை, மயில்சாமி, குருவிமலை முனுசாமி, வேலு, ராமகிருஷ்ணன், கோவிந்தராஜ், கொழப்பலூர் முனுசாமி, குப்புசாமி, சுப்பிரமணியன், மணி ஆகியோரின் உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு, முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்வந்தவர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது.
முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் 2.9.2021 அன்று “1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
21 சமூகநீதிப் போராளிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அப்போராளிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகம் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆதரவோடு 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலில் ஏ.கோவிந்தசாமி அவர்கள் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1957-ஆம் ஆண்டிலும், 1967-ஆம் ஆண்டிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையிலும் 1969-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலும் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார்.
2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், முன்னாள் அமைச்சரும், ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான . கோவிந்தசாமி அவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், முன்னாள் அமைச்சர் .கோவிந்தசாமி அவர்களுக்கு 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், த.கோவிந்தசாமி மகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. சம்பத் மற்றும் குடும்பத்தினர் முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பாபு ராஜேந்திரன் விழுப்புரம் மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.