மதுரை, உத்தங்குடியில் இன்று (ஜூன் 1) நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மண் - மொழி - மானம் காத்திட 'ஓரணியில் தமிழ்நாடு'” என்ற புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை சிறப்பாக முன்மொழிந்தார்.
இதையடுத்து மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
“எல்லாருக்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது நலன் அடையும் வரை சென்றடைந்துள்ளன. இத்தகைய நலத்திட்டங்களும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தொடர்வதற்காகவும், மாநில உரிமைகளை உறுதியாக காக்கவும், தமிழக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இந்த நோக்கில், தி.மு.க.,வின் புதிய உறுப்பினர் சேர்க்கை முயற்சி “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தொடங்கப்படுகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை தி.மு.க.,வின் உறுப்பினர்களாக சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளையும், உரிமைப் போராட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை மாவட்ட, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை கழகச் செயலாளர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், அனைத்து சார்புக் கழகங்கள், பாக முகவர்கள், நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலுள்ள தி.மு.க கட்சியினரும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம், தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
தி.மு.க.,வின் “ஓரணியில் தமிழ்நாடு” திட்டம், எதிர்வரும் தேர்தலுக்கான கட்சி ஆயத்தத்தை தொடக்கிவைக்கும் முக்கிய முயற்சியாகவும், மாநில உரிமைகள் மீதான வலியுறுத்தலாகவும் கருதப்படுகிறது.