கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், கேஸ் வெளியேறி வருவதால் இதனை தடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும்போது, லாரியில் இருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் தனியாக கழன்று விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறி வெளியேறியதால், லாரியில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடித்து கேஸ் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வரும் நிலையில், காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர். மேலும், இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கேஸ் முழுவதும் வெளியேற்றபட்டாலோ அல்லது கேஸ் முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டாலோ தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கேஸ் நிறுவன பொறியாளர்கள் என பலரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதிகாலை நடந்த இந்த விபத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவையில் கேஸ் டேங்கர் தனியாக கழன்று விபத்து: பாதிப்பை தடுக்க தீயணைப்பு துறையினர் போராட்டம்!#Coimbatore | #GasTanger pic.twitter.com/KOFgGcJzqe
— Indian Express Tamil (@IeTamil) January 3, 2025
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். கேஸ் டேங்கர் தனியாக கழன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 18 டன் கேஸ் கண்டெய்னர் மற்றும் வாகனத்தின் எடை என மொத்தமாக 35 டன் எடை அளவிற்கு லாரியும் கேஸ் கண்டெய்னரும் விழுந்துள்ளது. முதற்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்டெய்னிரில் இருந்து வெளியேறும் கேஸ் கசிவை அடைப்பதற்கு எம் சீல் போன்ற பொருட்களின் மூலமாக காஸ் கசிவு நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் சேலத்தில் இது போன்ற கேஸ் கண்டெய்னர் விபத்து மீட்பு வாகனங்கள் உள்ளது. தற்போது திருச்சியிலிருந்து மீட்பு வாகனம் வந்து வந்துகொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான கேஸ் லாரியில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்யப்பட்டு இருகூர் பகுதியில் உள்ள கேஸ் நிறுவன வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த டேங்க் லாரி மீட்பு பணியின் போது மேம்பாலத்தில் இருக்கும் 4 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை, மீட்பு பணிக்கு இடையூறாக இருப்பதினால் அந்த சிலையை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தினால் மட்டுமே டேங்கர் லாரியை அப்புறப்படுத்த முடியும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.