கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தூர்வாரப்படாத நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் வீதிகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவையில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக கோவை மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக நொய்யல் ஆறு செல்லும் பாதையான 79 வது வார்டு செல்வபுரம் பகுதியில் சரி வர தூர்வாரப்படாததால், அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் நொய்யல் ஆற்று வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்து ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? என்றும், இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
மழை காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் இது போன்ற இடங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளை தூர்வாரப்பட்டால் அப்பகுதியில் வெள்ளம் புகுந்து பாதிப்புகள் ஏற்படாது என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.