கோவையில், சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்ததால், சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதில், இன்று காந்திபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, வி.கே.கே. மேனன் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்த போது, சாலையின் நடுவே அமைந்து இருந்த உயர் மின் அழுத்த கம்பங்கள் திடீரென அடியோடு சரிந்து விழுந்தன.
ஆயிரக் கணக்கான வீடுகள் நெருக்கமாக அமைந்து உள்ள இப்பகுதியில் ராட்சத மின் கம்பங்கள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் மின் கம்பங்கள் துருப் பிடித்து பலவீனமாக இருந்தது தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் தான் இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்தனர். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மரங்களை அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் மின்சார கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.